இன்ஸ்டாவில் பழகியநிலையில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர், 19 வயது தீபக் என்ற இளைஞருடன் இன்ஸ்டாவில் பழகிவந்துள்ளார். இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இளம்பெண் மீது இளைஞருக்கு ஒருதலையாக காதல் ஏற்பட்டுள்ளது. இதை மறைத்து இளம்பெண்ணுடன் பழகிவந்த நிலையில், தம்பி என்கிற முறையில் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். இதனால் பெரியவர்களுக்கும் அக்கம்பக்கதினருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை.
இதேபோல், இருவருக்குமிடையே நீண்ட நாட்களாக நட்பு வளர்ந்து வந்த நிலையில், ஒருமுறை தன்னுடைய காதலை இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், தான் மறைத்து கொண்டு சென்ற கத்தியை எடுத்து, இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். மொத்தம் 3 இடங்களில் வெட்டியுள்ளார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் இளம்பெண் துடிதுடித்தார். என்ன செய்வதென்ற தெரியாமல், பயந்துபோன தீபக், வீட்டின் அறையில் இருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீபக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.