எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் என்பவரது மகன் ஹரிபாஸ்கர். இவருக்கு வயது 26 ஆகிறது. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு எடப்பாடி பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் குள்ளம்பட்டி வழியாக தனது வீடு இருக்கும் செட்டிபட்டி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, ஹரிபாஸ்கர், ஹெல்மெட் அணியாமல் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரே எடப்பாடி நோக்கி வந்த ஈச்சர் லாரி, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரிபாஸ்கருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே தேவூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், ஹரிபாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.