ரேஷன் கடை மூலமாக பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு துவக்கி வங்கி சேவைகளை வழங்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர் கடன், உரக்கடன், கால்நடை வளர்ப்பு கடன் உட்பட பல வகை கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 2023ல் மட்டும், 18.36 லட்சம் விவசாயிகளுக்கு, பயிர் கடனாக 15,500 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாய உறுப்பினராக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது.

எனவே, கூட்டுறவு சங்கங்களில் அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய வங்கி திட்டங்களை வகுத்து, இளைஞர்களை கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கி சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே அறிக்கையில், “கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் சராசரி வயது 53 ஆக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அட்டைதாரர்களுக்கு, அரசின் நலத் திட்டங்கள் ரேஷன் கடை வாயிலாகவே வழங்கப்படுகின்றன. எனவே, ரேஷன் கடைகள் மூலமாக கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்த கையேடு விநியோகிப்பதோடு, ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு சேமிப்புக் கணக்கு விண்ணப்பத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாயிலாக துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு கடை ஊழியர்களுக்கு தலா ஒரு கணக்குக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவும்.

அதேநேரம், சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு, கூட்டுறவு வங்கி கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்த கையேடுகள், வங்கியின் மின்னணு பரிவர்த்தனை வசதி, ஏ.டி.எம்., கார்டு வசதிகளை வழங்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Readmore: தேனீக்களை போல் அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள்!. எடப்பாடி பழனிசாமி பேச்சு!