சத்தியமங்கலம் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, திடீரெம அரசு பேருந்தை துரத்திய சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியே வருவது வாடிக்கையாகி உள்ளது. அந்தவகையில் நேற்று முன்தினம் காலை சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடியை நோக்கி அரசு பேருந்து, 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது.
அப்போது பேருந்தை பார்த்ததும் யானை துரத்த ஆரம்பித்தது. இதனை சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பின்னால் சிறிது துாரம் நகர்த்திக்கொண்டே சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் யானையை விரட்ட கூச்சலிட்டனர். வெகுநேரத்திற்கு பிறகு யானை மீண்டும் காட்டுக்குள் சென்றதையடுத்து பயணிகள் நிம்மதியடைந்தனர்.