சேலத்தில் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண்ணை காட்டுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே வாய்க்கால் பட்டறையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மலர் 43, கடந்த மாதம், 25ம் தேதி காலை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிசென்றுள்ளார். அவர் தனது கணவரிடம் சேலம் வந்து விட்டதாகவும், ஆட்டோவில் மருத்துவமனை செல்வதாக கூறினார். சிறிது நேரத்திற்கு பின் ராஜ், தன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாகியும் மலர் வீடு திரும்பாததால், மலர் குடும்பத்தினர் மருத்துவமனையில் விசாரித்தபோது அவர் அங்கு போகவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து கணவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடைசியாக மலர் யாரிடம் போனில் பேசியுள்ளார் என்று சோதனை செய்தனர். அப்போது, அதில், மலரிடம் கடைசியாக பேசியது, கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ், 32, என்பதும், இவர் பெயர் கன்னங்குறிச்சி ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து, நேற்று முன்தினம் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

பூண்டு வியாபாரம் செய்துவரும் கனகராஜுக்கும், மலருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த, 25ல் கனகராஜை பார்க்க கோரிமேட்டுக்கு மலர் சென்றுள்ளார். அங்கு கூட்டாளி சக்திவேலுடன் குடிபோதையில் சென்ற கனகராஜ், மலரை காட்டுக்குள் அழைத்து சென்று இருவரும் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், முட்புதரில், நிர்வாண நிலையில் கிடந்த மலரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Readmore: ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு!. அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை விதிப்பு!. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!