ஆத்தூர் அருகே ஓட்டுநர் செல்போன் பேசியபடி ஓட்டிச்சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி பகுதில் சென்றுக்கொண்டிருந்த போது, கல்லுக்காடு என்ற இடத்தில் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், விபத்துக்கு பேருந்தின் ஓட்டுநரே காரணம் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் மண்டலம் நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்தில் பழுது ஏதும் இல்லாத நிலையில் ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.