பள்ளி கழிவறையில் வைத்து 8ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த ஒரு மாதமாகப் பள்ளிக்கு வரவில்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியை மாணவியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்று விசாரித்துள்ளார். அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆறுமுகம் (48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகியோர் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதில் கருத்தரித்த மாணவிக்கு, கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, குழந்தைகள் நல பாதுகாப்பு மையம் மற்றும் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் புகார் அளித்தார். இதையடுத்து, டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, ‘வேறு மாணவிகள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை நடத்த வேண்டும். கைதான 3 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.