ஆடையை சரியாக தைக்கவில்லை எனக்கூறி டெய்லரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே டெய்லர் கடை நடத்தி வந்தவர் செல்வம். இவர், நேற்று முன்தினம் மாலை தனது கடையில் தலை மற்றும் காதுகளில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்திரமணியைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சந்திரமணி தனது பேண்ட்டை தைப்பதற்காக செல்வத்திடம் கொடுத்ததும், ஆனால் செல்வம் அதைச் சரியாகத் தைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதனால், சந்திரமணி செல்வத்திடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சந்திரமணி அங்கிருந்த கத்தரிக்கோலால் செல்வத்தைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நாகர்கோவிலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவலா..? முகக்கவசம் அணிவது கட்டாயமா..? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!!