கொங்கணாபுரத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் கட்சிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி இந்திரா (வயது 26). கர்ப்பிணியான இவர், கடந்த 19ஆம் தேதி வெள்ளாளபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்கு பின் இந்திராவுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திராவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் வெள்ளாளபுரம் அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த பணியில் இருந்த பணியாளர்கள் இந்திராவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிரசவத்திற்கு பின் கவனக்குறைவாக இருந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கொங்கணபுரம் போலீசார், இந்திராவின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.