ஆந்திராவில் காவலரை தாக்கியதாக கூறி இளைஞர்களை நடுரோட்டில் வைத்து போலீஸார் லத்தியால் அடித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி நகரில் கடந்த 25ம் தேதி கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் தெனாலி டவுன் 1 காவல் நிலைய கான்ஸ்டபிள் கண்ணா சிரஞ்சீவியுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, சிரஞ்சீவி தனது புகாரில், ஏப்ரல் 24 ஆம் தேதி பணியில் இருந்தபோது, ஜான் விக்டர், கரிமுல்லா மற்றும் ராகேஷ், நவீன் ஆகிய நான்கு நபர்கள் முன் விரோதம் காரணமாக தன்னைத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஜான் விக்டர், கரிமுல்லா மற்றும் ராகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் நவீன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், தெனாலி நெடுஞ்சாலையில் கைதான 3 இளைஞர்களையும் மண்டியிட வைத்து போலீஸ்காரர்கள் லத்தியால் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பொதுவெளியில் வைத்து காவலர்களே கொடூர தாக்குதலில் ஈடுபடலாமா என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.