ஓ.பன்னீர்செல்வம் ஆக இருக்கட்டும். வேறு யாராக வேனாலும் இருக்கட்டும். அதிமுக வளர வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கு போகவே கூடாது. ஒரு 6 மாதங்கள் பொறுமையாக இருங்கள் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லாப்பா கண்டிஷன் போட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சரியாக சொல்லப்போனால் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதற்காக அதிமுக சார்பில் பல்வேறு களப் பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல சர்ச்சைகளும் வந்துகொண்டே உள்ளது. அதாவது, அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது, அதற்கு விளக்கம் கொடுத்தது, அதிமுக உட்கட்சி விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என விவாதங்கள் வெடித்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில், அதிமுக எம்.எல்.ஏவும், மூத்த நிர்வாகியுமான ராஜன் செல்லப்பா அளித்த பேட்டி தற்போது பேசுப்பொருளாக மாறிவிட்டது. செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, ஆளுநர் பதவியை ஜார்க்கண்ட் மாநிலத்திலோ, மணிப்பூர் மாநிலத்திலோ கொடுக்கிறோம் என்று தான் கூறியிருப்பார்கள். அதை மறுக்கவில்லை. வாய்ப்புகள் இருக்கிறது. அதிமுக என்ற இயக்கம் வளர்வதில் சிறிய சிறிய இடையூறுகள் செய்யாதீர்கள். நீங்கள் உண்மையாகவே அதிமுகவில் இணைய வேண்டும் என்று நினைத்தால் ரகசியமாக சொல்லி விடலாம்.
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் ஆக இருக்கட்டும். வேறு யாராக இருக்கட்டும். அதிமுக வளர வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் எல்லாம் நீதிமன்றத்திற்கு போகவே கூடாது. ஒரு 6 மாதங்கள் பொறுமையாக இருங்கள். எங்களை போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் போய் கேட்கிறோம் என்று பேசியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட யாரையும் கட்சிக்குள் சேர்த்து கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பலமுறை தெளிவாக கூறிவிட்டார். இந்தநிலையில், ஓபிஎஸ் குறித்த ராஜன் செல்லப்பாவின் பேச்சால் அதிமுகவினரிடையேயும், தமிழக அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.