கள்ளக்காதலை கைவிட முயன்ற பெண்ணை கொலை செய்துவிட்டு, கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்னஅல்லாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சபீனாபானு. இவருக்கு வயது 33. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜான்பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, சபீனாபானு கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து, தன் பெற்றோருடன் சின்னஅல்லாபுரத்தில் வசித்து வந்தார்.

தற்போது சதுப்பேரியில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்த சபீனாபானு, அதே இடத்தில் வேலை செய்த 35 வயதுடைய சுரேஷ் என்ற ஆணுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். சில மாதங்களில் அவர்கள் உறவு கள்ளக்காதலாக மாறியது. இந்த உறவு சபீனாபானுவின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருந்தது என கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சுரேஷ் வேலைக்குச் செல்லவில்லை. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக சபீனாபானு அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். சுரேஷ் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றும் சபீனாபானு பதிலளிக்காமல் இருந்ததால், அவர் மீது கடும் கோபம் அடைந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுரேஷ், சபீனாபானுவின் வீட்டிற்கு சென்று, “ஏன் என்னிடம் பேசவில்லை? வேறு யாரையாவது காதலிக்கிறாயா?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சபீனாபானு, “இப்போது பேச வேண்டாம், நாளை பேசலாம்” என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், தன்னிடம் வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து அவரை தாக்க முயன்றார். சபீனா பானுவை காப்பாற்ற வந்த அவரது தந்தை சிராஜூதீனும், தாயார் ஆஜிராவும் சுரேஷால் கடுமையாக தாக்கப்பட்டனர். இருவரும் தலையில் காயமடைந்து மயங்கி விழுந்தனர். அந்த நேரத்தில் சபீனாபானு வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பிக்க முயன்றார். ஆனால் சுரேஷ் பின்னே ஓடி சென்று, அவரை பிடித்து இரும்பு ராடால் சரமாரியாக அடித்தார்.

இதில், சபீனாபானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுரேஷ் தன் பைக்கில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சுரேஷின் கைப்பேசி எண்ணை அடிப்படையாக கொண்டு அவரது விருபாட்சிபுரம் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது அறையில் சுரேஷ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். சபீனாபானுவை கொன்ற பின், சுரேஷ் மனவேதனையிலோ அல்லது பயத்திலோ தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். சபீனாபானுவின் பெற்றோர், படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவலா..? முகக்கவசம் அணிவது கட்டாயமா..? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!!