குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தனியாரை பொறுத்தவரை தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும்.

அதாவது, தடுப்பூசியை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால், அதன் அடிப்படையில் சில மையங்கள் திறக்கப்படும். விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும். இது முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை போல பயன்பெற முடியும்.

அதேசமயம் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. ஏனென்றால், நாம் தடுப்பூசி அளித்தால் அதை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்கும் வகையில் வசதிகள் இருப்பது அவசியம். பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ஆதார் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்..!! இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது..!!