குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் (Mpox) என்று அழைக்கின்றனர். இது மனிதர்கள் மத்தியில் எளிதில் பரவாது என்றாலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் உயிரிழந்த வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனாவைப் போல 2022ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது, முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் பரவத் தொடங்கியது. ஆப்ரிக்காவில் மட்டும் 17,000-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 517 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 160% இந்த நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.

அறிகுறிகள்

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் காய்ச்சலும், பின்பு உடலில் தடிப்புகளும் ஏற்படும். இது, முகத்தில் இருந்து உள்ளங்கால் வரை பரவும். தலைவலி, தசை வலி, உடல் சோர்வு ஏற்படும். தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும். குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது, மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அவசர நிலை

குரங்கு அம்மை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பொது டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ”குரங்கு அம்மை தொற்று தொடர்பாக அவசரநிலை கமிட்டி என்னை சந்தித்து, சில அறிவுரைகளை வழங்கினர். அதனை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன். உலக அளவில் பொது சுகாதாரத்தின் நிலை அபாயகரமாக உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தன்னாட்சி சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த நோய் தொற்றில் மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறது” என தெரிவித்தார்.