பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி நூதன முறையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால், தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். இதனால், எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் பகதர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதுடன், அங்குள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

பக்தர்களின் வசதிக்காக கோவில்களில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், கொடிமரம் ஆகிய பகுதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வழக்கத்திற்கு மாறாக கோவிலின் வெளிப்பிரகார பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் மட்டும் அதிகளவில் காகிதங்கள் கிடந்தன. இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, ஊழியர்கள் இதனை கவனிக்கத் தொடங்கினர். அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இளைஞர் ஒருவர், சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலில் காணிக்கை போடுவது போல் நடித்து, அட்டை ஒன்றை உள்ளே தள்ளியுள்ளர்.

பக்தர்களின் கூட்டம் அதிகம் என்பதால் தனது நூதன திருட்டை அரங்கேற்றியுள்ளார். இதையடுத்து பக்தர்கள் யாரேனும் பணம் போட்டவுடன் சிறிதுநேரத்தில் உண்டியலுக்கு அருகில் சென்று அந்த அட்டையை தூக்கி பணத்தை எடுத்துக்கொள்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மகேந்திரன் (வயது 37) என்பது தெரியவந்தது.

Readmore: திடீரென இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த மர்ம நபர்..!! கழுத்திடம் வந்த கை..!! கதறிய ஓட்டல் உரிமையாளர்..!! குமாரபாளையத்தில் பரபரப்பு..!!