தமிழக கிராமப்புறங்களில் வயதானவர்களைக் குறிவைத்து நடக்கும் திருட்டு, கொலை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்களில் உறவினர்கள் வயதானவர்களை தனியே விட்டுச் செல்வது அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வந்து அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. இப்படி தனியாக விடப்படும் வயதானவர்கள் பிழைப்புக்காக யாசகம் கேட்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இந்நிலையில், மத்திய அரசு இதுபோன்ற வயதானவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட முதியவர்களைப் பாதுகாக்க தேசிய முதியோர் இல்லங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும், இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “சமீப காலமாக கிராமப்புறங்களில் வயதானவர்களைக் குறிவைத்து திருட்டு, கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள சில மையங்களிலும் படுக்கை, போர்வை, தண்ணீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படுவதில்லை. வயதானவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை” என்று தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசு சார்பில், “தேசிய முதியோர் இல்லங்களை அமைக்க மத்திய அரசு நிதி வழங்கும். ஆனால், மையங்களை அமைத்து, பராமரிப்பது மாநில அரசின் பணி” என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “நிதி வழங்கினால் மட்டும் போதாது, அந்த நிதி சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் மத்திய அரசின் பணிதானே? சமூகத்தின் மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பது அரசுகளின் கடமை. எனவே, இந்த வழக்கில் மத்திய சமூக நலத்துறை முதன்மைச் செயலர், தமிழக சமூக நலத்துறை முதன்மைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்த்துள்ளது. எனவே, தமிழகத்தில் தேசிய முதியோர் இல்லங்கள் அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Read more ஒருமுறை முதலீடு…!!! ஆயுள் முழுவதும் பென்ஷன்..!!! எல்.ஐ.சி-யின் அசத்தலான ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க..!!!