சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சங்ககிரி ஆர்.டி.ஓ. தலைமையில் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்ககிரி ஆர்.டி.ஓ. லோகநாயகி பேசுகையில், ”கடந்த ஆண்டுகளைப் போல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், விழாவிற்கு வருவோர் கைகளில் கொடி, பேனர்கள் மற்றும் உருவப்படங்களை எடுத்து வர அனுமதி இல்லை. எந்த ஒரு அமைப்பினரும் தீரன் சின்னமலை நினைவு இடத்தில் பொருட்களை எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை. எந்த அமைப்பினருக்கும் சங்ககிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குறிப்பட்ட நேரத்தில் கலைந்து சென்றுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் காவல்துறையினர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாக வந்து குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சங்ககிரியில் உள்ள பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது. சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த ஒரு அமைப்பும் டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒருவர் பின் ஒருவராக வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Read More : ஜெயலலிதா, விஜயகாந்த் பாணியை கையிலெடுத்த விஜய்..!! சேலத்தில் முதல் மாநாடு..!! வரலாறு படைத்த திடல்..!!