கோடை காலத்தை முன்னிட்டு தேவூர், செட்டிப்பட்டி பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான டி.எம்.செல்வகணபதி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் தேவூர் சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் தேவூர் பேரூர் திமுக சார்பில் கோடை கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இதில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டிஎம் செல்வகணபதி தலைமை வகித்து நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், கரும்பு பால், நூங்கு, மோர், வெள்ளரிக்காய் ஆகியவைகளை வழங்கினார்.
அதேபோல், சேலம் மாவட்டம் அரசிராமணி செட்டிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசிராமணி பேரூராட்சி திமுக சார்பில் கோடை கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கிராமப்புற பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆராத்தி எடுத்து டிஎம் செல்வகணபதியை வரவேற்றனர். பின்னர், செட்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், கம்மங்கூழ் உள்ளிட்டவைகளை வழங்கினார்.