கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழை காரண்மாக கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் மக்கள் நலன் கருதி குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இதனால், கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வெளி மாநில பயணிகளும் வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணைக்கு வருவது வழக்கம். இதனால் இங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் 860 கன தண்ணீர் அடி வெளியேறி வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

இதையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Readmore: சேலத்தில் வெளுத்துவாங்கிய கனமழை!. கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்!. வியாபாரிகள் கவலை!