தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் வாழ்க்கையை தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்கான அவரது வியூகத்தை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை தொடங்கினார். அந்த மாநாட்டில் அவரது ரசிகர்கள் உட்பட, கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாடு பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது.
தமிழ்திரையுலகில், நடிகராக விஜய் இன் சிறந்த நடிப்பினால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் அவருக்கு உள்ளது. ஆனால், இப்போது அவர் அரசியல் தலைவராக மாறியுள்ளார். அவருடைய ரசிகர் பட்டாளம் அவரது அரசியல் பயணத்திற்கு கைகொடுத்து விஜய்-யை ஆட்சி கட்டிலில் அமரவைப்பார்களா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. இருப்பினும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், 2026ல் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து அதிரடியாக அடுத்தடுத்து காய்களை நகர்த்திவருகிறார்.
அந்தவகையில், தமிழ் நாடு முழுவதும் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே தவெகவின் செயல்பாடுகள் அடுத்து என்ன என கணிக்க முடியாதபடி விஜய் பலவற்றை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, திமுக ஊழல் பட்டியலை விஜய் வெளியிடப்போகிறார் என தகவல் வெளியான நிலையில், நேற்று, மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என அரசை குற்றம்சாட்டினார். ஏற்கனவே மா நாட்டில் திமுகவை வசைபாடிய விஜய், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் களமிறங்கியதாக மற்ற கட்சிகள் கூறிவருகின்றன.
இந்த நிலையில் வரும் தேர்தல் முதல்வராகும் கனவுடன் இருக்கும் விஜய், முழு அரசியல்வாதியாக தன்னை செதுக்கி வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஏற்ற தொகுதி என பார்த்து ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவர். அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்லில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நாகப்பட்டினம் அவரது முதன்மை விருப்பம் எனவும், அடுத்தடுத்த இடங்களில், அரியலூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.