கோடையை முன்னிட்டு ஏற்காட்டில் மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்க உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெறும் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (மே 23) தொடங்குகிறது. இந்த கண்காட்சியானது மே 29ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழா சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொழுதுபோக்காகவும், பாரம்பரிய கலாச்சாரத்தைப் பார்வையிடவும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு துறைகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறவுள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலையேற்றம் நடைபெறும். அதற்குப் பிறகு ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம் மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் கால்பந்து போட்டி நடைபெறும். அதே நாளில் குழந்தைகளுக்காக இளம் தளிர் நடைப்போட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவலும் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மே 25-ம் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சி, மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 26-ம் தேதி காலை 10 மணிக்கு அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் போட்டி மற்றும் படகு இல்லத்தில் படகு போட்டி நடைபெறும்.
மே 27-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மே 28-ம் தேதி கதக், குச்சிபுடி, பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்கள் அரங்கேறும். இறுதிநாள் மே 29-ம் தேதி நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழ்ச்சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவிற்காக சேலம் போக்குவரத்து மண்டலத்தின் வழியாக ஏற்காட்டுக்கு செல்லும் வழக்கமான 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதனால் மக்கள் எளிதாக விழாவில் கலந்து கொள்ள முடியும்.