குழந்தை இல்லாத காரணத்தால் மருமகளை மாமியார், மாமனார் இருவரும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரேணுகா. அவருக்கு வயது 30. அவர் ஒரு பெண் மருத்துவர். கடந்த 2020-ம் ஆண்டு சந்தோஷ் என்பவரை மணந்தார். இருவரும் நல்ல படிப்பு மற்றும் வசதியுடன் இருந்தனர். ஆனால், குழந்தை இல்லாததால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த சூழலில், சந்தோஷ் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவரது இரண்டாவது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மே 18-ம் தேதி, ரேணுகாவின் மாமியார் ஜெயஸ்ரீ, ரேணுகாவை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் இருந்து திரும்பும்போது, ஜெயஸ்ரீ, ரேணுகா விபத்தில் இறந்துவிட்டதாக காவல்துறைக்கு போன் செய்துள்ளார். ஆனால், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தபோது, ரேணுகாவைத் தவிர வேறு யாருக்கும் காயம் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
அதாவது, இருசக்கர வாகனத்தில் இருந்து ரேணுகாவை அவரது மாமியார் ஜெயஸ்ரீ தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்த ரேணுகாவை மாமனார் கமன்னா கல்லால் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இருவரும் ரேணுகாவின் உடலை பைக்கில் கட்டி, 100 மீட்டருக்கும் மேல் இழுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயஸ்ரீ மற்றும் கமன்னா இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களின் மகன் சந்தோஷ் ஹோனகண்டேதான் ரேணுகாவைக் கொல்லத் தூண்டியதும் அம்பலமாகியுள்ளது. குழந்தை இல்லாததால் மருமகளைக் கொலை செய்ய கணவரே திட்டமிட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.