தேவூர் அருகே கொங்கனூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கொங்கனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் விரதம் இருந்து தினந்தோறும் கொங்கனூர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக பூஜை தீபராதனை செய்து வழிபாடு செய்தனர்.

பொங்கல் விழாவிn முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்தக்குடம் எடுத்தல், பூங்கரகம் எடுத்தல், பொய்க்கால் குதிரை ஆட்டம், கத்தி ஆட்டம், கடவுள் வேடம் அணிந்து கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு அம்மன் திருவீதி உலா கொட்டாயூர், நல்லங்கியூர், வட்ராம்பாளையம் வழியாக கோவில் சன்னதி வந்தடைந்தது. இதனையடுத்து, இரவு முழுவதும் பாரன் நடத்தல், சரபங்காநதியில் பக்தர்கள் புனித நீராடி அலகு குத்துதல், சிறுவர்கள் உடம்பில் சேற்று மண்ணை தடவிக்கொண்டு சேத்து முட்டி சட்டி எடுத்தல், 1008 முறை நிலத்தில் படுத்து எழுந்து வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு தட்டம் எடுத்தல், முடி காணிக்கை செய்தல் கெடா வெட்டுதல், அக்னி கரகம் எடுத்தல், பெண்கள் நாக்கு அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

இதில் சென்றாயனூர், கீழ்கொட்டாய், தெற்கு தோட்டம், மேட்டாங்காடு, வடக்குகாடு, ஒடசக்கரை, அக்கரைக்காடு, எடப்பாடி, புளியம்பட்டி, வட்ராம்பாளையம், சித்தார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வெள்ளிக்கிழமையான இன்று மாரியம்மன் உலா மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.