சேலம் மாவட்டம், தாரமங்கலம் சுற்றுவட்டார வாகன ஓட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் ஆகியோர் நலச்சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாரமங்கலம் பேருந்து நநிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சங்கத்திற்கான அலுவலகம் அமைத்தும் அந்த இடத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தியும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றுலா வாகன அலுவலகம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாகன ஓட்டிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தாரமங்கலம் காவல் நிலையம் சென்று வாகன ஓட்டிகள் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சங்க அலுவலகம் அமைத்து வாகனங்களை இயக்கி வருகிறோம்.
மேலும், எங்களால் யாருக்கும் எந்த இடையூறும் இதுவரை ஏற்ப்படவில்லை கடந்த சில வருடங்களாக இந்த இடத்தை அப்புறப்படுத்த கைலாசநாதர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது சங்க அலுவலகத்தை கைலாசநாதர் கோவில் நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்தியது எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்று தெரிவித்தனர்.