9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஜூன் 7ஆம் தேதி ரத்தம் கசிந்த சூட்கேஸில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் முகத்தில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமி தன் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இரண்டு மணி நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடத் தொடங்கினர். பின்னர், பக்கத்து வீட்டுக்குச் சென்றதாக சிலர் கூறியதை அடுத்து, சிறுமியின் தந்தை அந்த வீட்டின் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு, சூட்கேஸில் ரத்த வெள்ளத்தில், அரைகுறை ஆடையுடன் தன் மகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டெல்லி, காஜியாபாத், மீரட், அலிகர் ஆகிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.