பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், உலக பிரசித்தி பெற்றது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் பாகுபலி காளை, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.
இதையடுத்து, பாகுபலி காளையின் உரிமையாளருக்கு டிராக்டர், சைக்கிள், மாடு மற்றும் கன்று குட்டி பரிசாக வழங்கப்பட்டன. இந்நிலையில், பாகுபலி காளை மற்றும் அதன் உரிமையாளர் உள்ளிட்டோர் சொந்த ஊரான அயோத்தியாபட்டினத்திற்கு வந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காளைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை மற்றும் மேள தாளம் முழங்க பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
தங்களுக்கு இப்படியொடி வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை என்று காளை உரிமையாளர் மோகன் ராஜ் கூறியுள்ளார். பயிற்சி என்பது பிறவியிலேயே இருப்பது தான். நாங்கள் பெரிய அளவுக்கு பயிற்சி கொடுக்கவில்லை. சத்தான தீவனமும், காளையின் மீது முழு நம்பிக்கையும் வைத்திருந்தோம். ஜெயித்ததை தாண்டி பாகுபலி காளை களத்தில் நின்றதே எங்களுக்கு பெருமை என்கிறார் மோகன்ராஜ். ஜல்லிக்கட்டு வெறும் போட்டி அல்ல.. பாரம்பரிய வாழ்வியல் என்பதை மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தி உள்ளது பாகுபலி காளைக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு.