கல்குவாரியில் எதிர்பாராத விதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டையில் “மேகா ப்ளூ மெட்டல்” என்ற தனியார் கல்குவாரியில் வழக்கம்போல வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மைக்கேல் என்ற தொழிலாளர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கல்குவாரியில் பணி செய்துகொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய 5 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் மைக்கேலுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ஷாக்!. இளைஞர்களிடம் அதிகரிக்கும் இரத்த அழுத்தம், சுகர்!. என்ன காரணம்?. எவ்வாறு தடுப்பது?. அறிகுறிகள் இதோ!.