போலியான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பல பெண்களை பாலியல் ரீதியாக மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகரில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஒரு வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், தினமும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்த நிலையில், திடீரென கோபி தன் மீது சந்தேகம் கொண்டு இரவு நேரங்களில் வேறு யாரிடமும் பேசக்கூடாது, தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு, கோபி ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி, தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் மகளின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், அந்தப் பெண் கோபியின் செல்போன் நம்பரையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டு, புதிய செல்போன் நம்பர் வாங்கினார். ஆனால், கோபி தனது அக்காவின் செல்போன் நம்பரைக் கண்டுபிடித்து, அவரை மிரட்டி அந்தப் பெண்ணின் புதிய செல்போன் நம்பரை பெற்று மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். “நீ என்னிடம் பழகி வந்ததை உன் கணவரிடம் தெரிவிப்பேன்” என்று மிரட்டியதோடு, மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பெண் கோபியை கைது செய்யுமாறு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை அமைத்து கோபியின் செல்போன் நம்பரை டவர் மூலம் கண்காணித்தனர். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கோபியை கைது செய்தனர். விசாரணையில், கோபி சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றுவிட்டதும், தற்போது தேங்காய் குடோனில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மேலும், கோபி வெவ்வேறு பெயர்களில் ஐந்து முகநூல் பக்கங்களும், ஒன்பது இன்ஸ்டாகிராம் கணக்குகளும் வைத்து, நிறைய பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோபியிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Read more : “தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றால் ஆபத்தா”..? “முகக்கவசம் கட்டாயமா”..? சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!