சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 வயது இளைஞர் உயிரிழந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. சிங்கப்பூர், சீனா போன்ற ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் சேத்துக்குழி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு வயது 25. இவர் ஒரு ஜேசிபி ஆபரேட்டர். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, தமிழரசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தமிழரசன் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் விளக்கமளித்துள்ளார். “தமிழரசனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு இணை நோய்கள் இருந்தன. இந்த இணை நோய்களே அவரது உயிரிழப்புக்குக் காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.