காதலன் ஒருவர் தனது காதலி கர்ப்பமாக இருந்ததால் கொலை செய்து, உடலை சூட்கேஸில் வைத்து சாலையோரம் வீசியுள்ள சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டை, பச்சுபள்ளி-மியாபூர் சாலையில், முட்புதருக்குள் ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வந்ததால், ஆடு மேய்க்கும் ஒருவர் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு பெண்ணின் அழுகிய உடல் இருந்தது. பின்னர், போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். சூட்கேஸ் புதியதாகவும், தங்க நிற கைப்பிடியுடனும் இருந்ததால், போலீசார் 75 கடைகளில் விசாரித்தனர். அதில், மே 23 அன்று பச்சுபள்ளியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஒருவர் அந்த சூட்கேஸை வாங்கியது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, அந்த நபரின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனர்.

பின்னர், இந்திரம்மா காலனி அருகே நேபாளத்தைச் சேர்ந்த விஜய் தோஃபா (வயது 30) என்பவரைப் பிடித்தனர். மேலும், அவரிடம் விசாரித்தபோது, அவர்தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால், விஜய் தோஃபா மற்றும் தாரா பெஹாரா (33) ஆகியோர் நேபாளத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். தாரா பெஹாராவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இருவரும் ஏப்ரல் 4 அன்று ஐதராபாத் வந்தனர். விஜய் தனது சகோதரருடன் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, பவுராம்பேட்டையில் உள்ள இந்திரம்மா காலனியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, இருவரும் சேர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், தாரா கர்ப்பமாக இருப்பதை விஜய் அறிந்ததும், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளார். மே 23 அன்று அதிகாலை 5 மணிக்கு இது தொடர்பாக இருவருக்கும் சண்டை வந்துள்ளது. அப்போது விஜய், தாராவை ஒரு துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பிறகு, ஒரு பெரிய சூட்கேஸ் வாங்கி, அதில் உடலை அடைத்து, பச்சுபள்ளி-மியாபூர் சாலையில் உள்ள ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு அருகில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் விஜய்யைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Read more “பகீர்..!! ஓடும் ரயிலில் பெண் செய்த அதிர்ச்சி சாகசம்..!! வைரலாகும் வீடியோ..!!”