வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். ரேவதி கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் கடந்த வியாழக்கிழமை காலை சென்றுள்ளார்.

இந்த ரயில் பகல் 12 மணியளவில் வேலூர் மாவட்டம், காவனூர் – விரிஞ்சிபுரம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த ரேவதியிடம் அதே பெட்டியில் இருந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். திடீரென ரேவதியின் கையை முறுக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவரை, இருப்புப்பாதை பராமரிப்பு பணியில் இருந்த கேங்க்மேன் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் வசித்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசாரின் அதிரடி விசாரணையில் ரேவதிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக வேலூர் மாவட்டம் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கருணை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியை சென்னை கோட்ட ரயில்வே முதுநிலை மேலாளர் பரத்குமார், கூடுதல் கோட்ட மேலாளர் பிரதாப் சிங் மற்றும் சந்திரகுமார் உள்ளிட்டோர் இன்று (பிப்.8) நேரில் சந்தித்து நலம் விசாரித்து, கருணைத்தொகை ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

முன்னதாக, ரேவதியின் கருவில் வளர்ந்து வந்த 4 மாத சிசுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவ்வப்போது, ஸ்கேன் செய்து சிசுவின் நிலையை பரிசோதித்தனர். இன்று (பிப்.8) பகல் 12 மணியளவில் நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் சிசுவின் இதயத்துடிப்பு நின்றதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தையை கருவில் இருந்து பாதுகாப்புடன் அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ குழுவினர் கூறினர்.

Readmore: ஈரோடு கிழக்கில் வெற்றியை உறுதி செய்த திமுக..!! நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுத்த நோட்டா..!!