ஆத்தூர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளை முட்டியதில் தேமுதிக முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப் புறங்களில் ஜல்லிக்கட்டு உள்பட பல வீர விளையாட்டுக்கள் நடப்பது வழக்கம். இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, எருதாட்டம் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, கூலமேடு, கடம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும்.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், இந்த எருதாட்டத்திற்கு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், காளைகள் அவிழ்த்து விட்டு எருதாட்டம் நடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் எருதாட்ட நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர்.
இதையடுத்து அங்கிருந்து காளைகளை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக முன்னாள் கவுன்சிலர் மணிவேல் (43), அழைத்துவந்த காளை மாடு மிரண்டு ஓடியுள்ளது. அதை தடுத்து நிறுத்த முயன்ற அவரின் கழுத்தில் காளை குத்தியது. இதில், நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய தம்மம்பட்டி போலீசார், உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.