தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கொடூரக் கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள குளத்துப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் என்பவர். இவருக்கு வயது 67. இவரது கணவர் ராசப்பன். இவர் கடந்த 30 ஆண்டுக்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் மற்றும் கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். இவர் குளத்துப்பாளையத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டு தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினார். இதையடுத்து, அவர் வீட்டு வாசலில் கட்டில் போட்டு படுத்து உறங்கி உள்ளார். இந்நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் சாமியாத்தாள் வீட்டிற்கு வந்து அவரை தட்டி எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி வீட்டைத் திறந்து நகைகள் மற்றும் பணத்தை எடுத்துத் தருமாறு மிரட்டினார்கள்.

இதனால் பயந்து போன சாமியாத்தாள் பெரும் கூச்சலிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த மர்ம நபர்கள், சாமியாத்தாள் கழுத்து மற்றும் வாய் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால், ரத்த வெள்ளத்தில் இருந்த சாமியாத்தாள், அவரது செல்போன் மூலம் பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு இதைப்பற்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் வந்து சாமியாத்தாளை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகள் யார் எவர் என்று தெரியாததால் அவர்களை பிடிக்க பரமத்திவேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை தொடர்பாக தோட்டத்து வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more “உயிரை காவு வாங்கும் கல்லீரல் நோய்”..!! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்..!! தடுப்பது எப்படி..?