சத்தீஸ்கரில் சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட நிருபரை, கொலை செய்த வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர் (வயது 28). பத்திரிகையாளரான இவர் மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிட்டு பிரபலமானவர். அதாவது, கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் பிடித்து வைத்திருந்த சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை இவர் மீட்டு வந்தார். இந்தநிலையில், கடந்த புத்தாண்டு அன்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி , அவரது மூத்த சகோதரர் யுகேஷ் சந்திரகர் என்பவரும் பத்திரிகையாளராக உள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் முகேஷை போலீசார் தேடி வந்துள்ளனர்.
அப்போது 28 வயது ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகரின் சடலம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) பிஜப்பூரில் உள்ள ஒரு ஒப்பந்தக்காருக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. அதாவது அந்த இடம் சுரேஷ் என்பவரால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேர் உட்பட பலர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கங்களூர் மற்றும் நெலசனார் கிராமங்களுக்கு இடையே சாலை அமைப்பதில் கட்டுமான ஊழல் தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இதையடுத்து, ஒப்பந்ததாரர் சுரேஷின் சகோதரரான ரித்தேஷ், முகேஷை அழைத்து பேசியுள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான இடத்தில் சந்தித்துள்ளனர். அங்கு வைத்து தான் செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நிருபரின் உடல் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவரது தலையில் 15 எலும்புகள் முறிவு, 4 நெஞ்சு எலும்பு முறிவு, கழுத்து எலும்புகள் முறிந்திருப்பது தெரியவந்தது. மேலும் கல்லீரல் 4 துண்டுகளாக வெட்டப்பட்டும், இதயத்தை வெளியே பிடுங்கி எடுக்கப்பட்டு ரண கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.