தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை அண்டாவில் தவறி விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், இவரது மனைவி காஞ்சனா தேவி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சபீனா பானு என்ற குழந்தை உள்ளது. இந்தநிலையில், காஞ்சனா தேவி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, அண்டாவிற்கு தண்ணீர் நிரப்புவதற்காக பைப்பை திறந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சபீனா, எதிர்பாராத விதமாக நீர் நிரம்பிய அண்டாவிற்குள் தவறி தலைகீழாக விழுந்துள்ளது. அண்டாவில் இருந்து தலையை வெளியே எடுக்க தெரியாத நிலையில், மூச்சுத் திணறி மயக்கமடைந்துள்ளது.
இதையடுத்து, குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது, அண்டாவில் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Readmore:சேலத்தில் மூட்டை மூட்டையாக கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்!. ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது!.