சாலையோர கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை பகுதியில் நடைபெறும் அசன பண்டிகைக்காக கோவையை சேர்ந்த 8 பேர் குடும்பத்துடன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மீரான்குளம் பகுதியில் இருந்த சாலையோர கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் நீந்தி வெளியே வந்துள்ளனர். மேலும், 5 பேர் வேனுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்தனர். ஆனால், 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது சிரமம் என்பதால், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உடனே வரவழைக்கப்பட்டன. மேலும், ஆம்னி வேன் கிணற்று சகதியில் சிக்கியிருந்தால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.
சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு ஆக்சிஜன் சிலிண்டருடன், கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், வேனில் கயிறுகளை கட்டி கிரேன் உதவியுடன் மீட்டனர். அப்போது, வேனில் இருந்து ஒரு குழந்தை உள்பட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. வேனின் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்ததா..? அல்லது ஓட்டுநர் கண் அசந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.