மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 21ஆம் தேதி தங்கை நகை கடனுக்காக புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில் தங்க நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒரு நகையின் மதிப்பு ஒரு 100 ரூபாயாக இருந்தால் அதற்கு 75 ரூபாய் வரை மட்டுமே நகை கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தங்க நகை கடன் தொடர்பாக நகையின் ரசீது தேவை மற்றும் நகையின் மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் போன்ற பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி விதித்தது. பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அவசர பணத்தேவைக்கு நகை கடனை நம்பியுள்ள சூழலில், ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, தங்க நகை கடன் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.
தங்க நகை கடன் புதிய கட்டுப்பாடுகள்: தங்க நகைக்கடன் பெற, நகையின் ரசீது தேவையில்லை. கடன் பெறுபவர்கள் ‘இந்த நகை என்னுடையதுதான்’ என்று சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு தங்க நகையின் மதிப்பில் 85% வரை கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு 80%, ரூ.5 லட்சத்திற்கு மேல் 75% என கடன் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.5 லட்சம் வரையிலான கடன் பெறுபவர்களுக்கு, கடனை திருப்பி செலுத்தும் திறன் பற்றிய தகுதி மதிப்பீடு தேவையில்லை. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும். அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.