பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், அவசர தேவைக்கு நகைக்கடனை நம்புகின்றனர். ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் அவர்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்கியது சமீபத்திய புதிய விதி படி, கடன் காலாவதியான நாளில் வட்டியுடன் அசலும் கட்டி, நகையை மீட்ட பின்பே மறுநாளில் மீண்டும் அடகு வைக்க இயலும். அதே நாளில் வட்டி மட்டும் கட்டி நகையை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வில், முழு தொகையை செலுத்தி பின்னர் மீண்டும் கடன் பெற வேண்டிய அவசியம், நிதிச் சுமையை அதிகரிக்கிறது.
இதனால், மக்கள் முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு பணம் எடுத்து நகையை மீட்டுவைத்து மறுபடி அடகு வைக்க நேரிடுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களிடம் மாதந்தோறும் வட்டி செலுத்த வலியுறுத்தப்படுவதும் மன உளைச்சலாக இருக்கிறது.
இந்த புகார்களைப் பற்றி கூட்டுறவு வங்கிகள் விளக்குவது என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் கடன் பெற்றவர்கள் வருடத்தில் ஒரு முறை மட்டும் வட்டி செலுத்தினால் போதும். ஆனால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள், ஒவ்வொரு 3 மாதத்துக்கும் அசலும், வட்டியும் கட்ட வேண்டும்.
இந்த விதி ஏராளமான மக்களுக்கு சிரமம் தருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தக் கட்டுப்பாட்டை 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் மாற்ற ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன், உடனடியாக செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால், சிலர் இந்த விதிகள் தனியார் நிறுவனங்களுக்கு உதவியாக இருப்பதாகவும், மக்கள் மேலும் கடன் எடுக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்றும் விமர்சனம் செய்து வந்தனர்.
இதுமட்டுமல்லாமல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரும், இந்த புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக சில பரிந்துரைகள் மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பரிசீலித்து அவசரப்படாமல் புதிய வழிகாட்டுதல் நெறிமுறையினை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பான அறிவிப்பில், “சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக நகைக்கடன் பெறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதனை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.