உலகம் முழுக்க 2024ம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2025ம் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் வரவேற்க தயாராகிவரும் நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், கொண்டாடுபவர்கள் பாதுகாப்பாக கொண்டாடவும் சேலம் மாநகர் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ” இன்று இரவு 9 மணியில் இருந்து சேலம் மாநகரில் 700க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாலைகளில் வேகமாக செல்பவர்கள், மதுபோதையில் வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சேலத்தில் உள்ள முக்கிய பாலங்களான நான்கு ரோடு, ஐந்து ரோடு மேம்பாலம், ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி வழியாக அஸ்தம்பட்டி செல்லும் மேம்பாலம், முள்ளுவாடி கேட் மேம்பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்கு மேல் மது அருந்தும் கூடங்கள் செயல்படக்கூடாது. இரவு 1 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம் உள்பட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. நீச்சல் குளங்களை மூடவேண்டும். விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கியிருந்தால் உடனடியாக தகவல் கொடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், சேலம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகள் உடைமைகள், பார்சல் பொருட்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படும்.