தங்க நகையை அடகு வைப்பதில் சில விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளதால், இனி நகைக்கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இனி நகைகளை அடகு வைக்கும்போது, தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும். (உதாரணத்திற்கு நீங்கள் வைக்கும் நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால், அதில் 75 ரூபாய் வரை மட்டுமே உங்களுக்கு கடன் வழங்கப்படும்).
➥ நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும். அப்போது தான், நகைக்கடன் வழங்கப்படும். கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா..? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
➥ தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க வங்கிகள் அனுமதிக்கக் கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால், அவர்களுக்கு நகைக் கடன் வழங்கக் கூடாது.
➥ ஒரு கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க முடியாது. நகைக்கடன் வாங்கி ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே, நகையை திருப்ப வேண்டும்.
➥ நகைக்கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வங்கியிடம் காண்பிக்க வேண்டும். குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
➥ தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிழல் பெறுவது அவசியம். நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம்.
➥ கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
➥ நகைக்கடன் வாங்கியவர் கடனை திரும்ப செலுத்திய 7 நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், கடன் கொடுத்த வங்கிகள், ஒரு நாளைக்கு தலா ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.
வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் போன்ற அனைத்து வங்கிகளும் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளால், நகை அடகு கடைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது, இவர்கள் நகைகளை பராமரிக்க முடியாமல் போகலாம் என்று இனி நகைகளை அடகிற்கு எடுக்க முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், சில நகை அடகு கடைகள் இந்த புதிய விதிகள் காரணமாக மொத்தமாக மூடப்படும் நிலை கூட ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.