கடையில் சிப்ஸ் திருடியதாக கூறி 12 வயது சிறுவனை கடைக்காரர் அடித்த நிலையில், மனமுடைந்த சிறுவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாசிம் மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். அவர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் மே 22 அன்று மாலை, ஒரு கடையில் இருந்து சிப்ஸ் பாக்கெட் ஒன்றை பணம் கொடுக்காமல் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட கடை உரிமையாளர் சுபாங்கர் தீட்சித், சிறுவனைத் துரத்திப் பிடித்து, பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்துள்ளார். சிறுவன் தான் திருடன் இல்லை என்றும், வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளான். ஆனால், கடை உரிமையாளர் அதைக் கேட்காமல், அவனை தோப்புக்கரணம் போடும்படி வற்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவனுக்கு நடந்த அவமானத்தால் மனமுடைந்து வீட்டிற்குச் சென்றான். பிறகு உள்ளே சென்று தனது அறையைப் பூட்டிக்கொண்டான். நீண்ட நேரம் அறை திறக்காததால், பதறிய தாய் கதவை உடைத்துப் பார்த்தபோது, விஷம் குடித்து வாயில் நுரை வந்த நிலையில் சிறுவன் கிடந்துள்ளான். அருகில், “அம்மா, நான் திருடன் இல்லை. நான் சிப்ஸ் திருடவில்லை. இதுவே என் இறுதி வார்த்தைகள். இந்தச் செயலுக்கு என்னை மன்னியுங்கள்” என்று பெங்காலி மொழியில் எழுதப்பட்ட கடிதம் கிடந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிப்ஸ் கடை உரிமையாளர் சுபாங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Read more “காட்டுப் பகுதியில் கருகிய சடலம்”..!! டியூசன் மாணவர்களுடன் சேர்ந்து கணவரின் கதையை முடித்த டீச்சர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!