10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட 30 வயது பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டச் சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அனீஸ் என்பவர். இவர் பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவர் மேட்ரிமோனி தளத்தில் தனக்கான துணையைத் தேடினார். அப்போது ஒரு பெண், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரேஷ்மாவுக்காக மாப்பிள்ளை தேடுவதாகக் கூறி, ரேஷ்மாவின் நம்பரை அனீசுக்குக் கொடுத்தார். அதன் பிறகு அனீஸ் ரேஷ்மாவிடம் பேசத் தொடங்கினார்.

இந்நிலையில், அனீசும் ரேஷ்மாவும் கோட்டயத்தில் ஒரு மாலில் சந்தித்தனர். அப்போது ரேஷ்மா, தான் அனாதை என்றும் அவர் ஆசிரமத்தில் வளர்ந்ததாகவும், உறவினர்கள் யாரும் இல்லாததால் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் பரிதாபக் கதைகளை அவிழ்த்து விட்டார். மேலும், இதைக் கேட்ட அனீஸ், ரேஷ்மாவைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து திருமணம் ஜூன் 6 அன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள், ரேஷ்மா அனீசின் நண்பர் வீட்டில் தங்கினார். ஆனால், ரேஷ்மாவின் நடவடிக்கைகளில் அனீசின் நண்பர் குடும்பத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, மறுநாள் காலை, மேக்கப் செய்வதற்காக ரேஷ்மாவை அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ரேஷ்மா மேக்கப் செய்து கொண்டிருந்தபோது, அனீசும் அவரது நண்பரும் ரேஷ்மாவின் கைப்பையைச் சோதனை செய்தனர். அப்போது, ரேஷ்மாவுக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடந்ததற்கான ஆவணங்களைக் கண்டெடுத்தனர். உடனே, அனீஸ் ஆரியநாடு போலீசுக்குத் தகவல் கொடுத்தார். மேலும், ரேஷ்மா மேக்கப் முடித்து வெளியே வந்ததும், அங்கு தயாராக இருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். விசாரணையில், தான் பல பேரைத் திருமணம் செய்து மோசடி செய்ததை ரேஷ்மா ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ரேசஷ்மாவிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், ரேஷ்மாவுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்ததும், வரும் ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வேறு ஒருவரைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இவர் மேலும், இளைஞர்களை நம்ப வைத்து, திருமணம் செய்து, அவர்களிடமிருந்து நகை, துணிமணிகள் போன்றவற்றை வாங்கிவிட்டு, பிறகு பல கதைகளைச் சொல்லி திருமண உறவைத் துண்டிப்பது ரேஷ்மாவின் வாடிக்கையாக இருந்துள்ளது. இதுவரை அவர் 10 இளைஞர்களை ஏமாற்றித் திருமணம் செய்து மோசடி செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு தனது 19 வயதில் ரேஷ்மா முதல் திருமணம் செய்துள்ளார். இப்படி ஒரு மோசடித் திருமணத்தில் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு இப்போது இரண்டு வயதாகிறது. இந்த சினிமாவையும் மிஞ்சும் வகையில் செயல்பட்ட ரேஷ்மாவின் வாக்குமூலத்தைக் கேட்டு போலீசாரே அதிர்ந்து போயினர். ரேஷ்மாவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தக் கேரளப் பெண்ணின் மோசடிச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர்..!! ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!