ரேஷன் தொடங்கி ஆம்புலன்ஸ் வரை அத்தியாவச தேவைகள் எதற்கும் ஆதார் தேவை என்ற நிலை வந்துவிட்டது. இந்த கார்டு இல்லையென்றால் பெரும்பாலான அரசு சேவைகளை பயன்படுத்த முடியாது. அதேநேரத்தில் இந்த கார்டு இருந்துவிட்டால் எல்லா சேவைகளையும் எளிதாக அணுகலாம். ஆதார் கார்டை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. மற்ற அடையாளச் சான்றுகளை பயன்படுத்தும் இடத்திலும் கூடுதலாக புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று கேட்பது அதிகரித்துள்ளது. அந்த இடங்களில் ஆதார் கார்டை காட்டுவது பரவலாகியுள்ளது. இப்படி அதிக பயன்பாட்டுக்கு வந்துள்ள ஆதார் தொலைந்துபோனால் என்ன செய்வது என்ற கவலையுடன் பத்திரமாக பாதுகாக்க வேண்டியுள்ளது. லைசென்ஸ், பாஸ்போர்ட்டு போல இல்லாமல் டூப்ளிகேட் ஆதார் கார்டு பெறுவது எளிது என்பது சற்று நிம்மதி அளிக்கும் விஷயம்.
ஒருவேளை உங்களிடம் இருந்த ஒரிஜினல் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?, மீண்டும் முறைப்படி ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து அது வரும் வரை காத்திருப்பீர்களா?. அப்படி செய்ய தேவையில்லை. உடனடியாக ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்து கொள்ள முடியும். ஆதார் கார்டு சேதமடைந்தவர்களுக்கும் இந்த சேவை மிகவும் உபயோகமாக இருக்கும். அந்தவகையில் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் டூபிளிகேட் ஆதார் அட்டையை பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
டூப்ளிக்கேட் ஆதார் கார்டை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி? முதலில் https://uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில் இருக்கும் ‘My Aadhaar’ என்ற மெனுவை கிளிக் செய்யவும். அந்த பகுதியில் உள்ள பல்வேறு சேவைகளில் இருந்து ‘Order Aadhaar Reprint’ என்ற ஆப்சனைத் தேர்வு செய்யவும். 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க Virtual ID ஐ பதிவிட்ட பிறகு, பக்கத்தில் காட்டப்படும் கேப்ட்சா (CAPTCHA) என்பதைத் தேர்ந்தெடுத்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை பதிவிட்டு உறுதிபடுத்தவும். OTP சரிபார்ப்பு முடிந்தவுடன், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். அவற்றை சரிபார்த்து, ரீபிரிண்ட் சேவைக்கான கட்டணத்தை செலுத்தவும்.
கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு புதிய ஆதார் கார்டு அனுப்பப்படும். இதற்கான Service Request Number எண்ணும் உங்களுக்கு கிடைக்கும். உடனடி தேவைக்கு, நீங்கள் UIDAI இணையதளத்தில் இருந்து e-Aadhaar ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இது உடனடியாக கிடைக்கும் என்பதால் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் மீள்பதிப்பு விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ள, UIDAI இணையதளத்தில் ‘Check Aadhaar Reprint Status’ பகுதியில் ஆதார் எண்ணை பதிவிட்டு சரிபார்க்கலாம்.
கூடுதல் உதவி அல்லது சந்தேகங்களுக்கு, UIDAI-யின் தொலைபேசி எண்: 1947 அல்லது, email: phonehelp@uidai.gov.in முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம். ஆதார் கார்டு இழந்துவிட்டால் அதற்காக பதட்டமடைய வேண்டியதில்ல. தற்போது UIDAI வழங்கும் ஆன்லைன் சேவைகள் மூலம், உங்கள் ஆதார் கார்டை மீண்டும் பெற்றுக்கொள்வது மிக எளிமையான செயலாக மாறிவிட்டது. மேலே கூறப்பட்ட படிகள் மூலம், உங்களுடைய ஆதார் கார்டை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ஆதார் கார்டை பெறலாம். மேலும் அவசர தேவைகளுக்கு விண்ணப்பித்த பிறகு இ-ஆதார் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.