சத்தமில்லாமல் உயிர்களைக் காவு வாங்கும் கொடிய கல்லீரல் நோய்கள் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார நிபுணர்கள் MASLD (வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய்) மற்றும் MASH (ஸ்டீட்டோஹெபடைடிஸ்) போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட நாள்பட்ட நோய்கள் பற்றி தீவிரமாக எச்சரித்துள்ளனர். இந்த நோய்கள் லட்சக்கணக்கானோரின் உயிர்களை சத்தமில்லாமல் காவு வாங்கும் ஒரு ‘அமைதியான அணுகுண்டு’ போல் இருக்கின்றன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால், இதற்கான விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், 2025 ஜூன் மாதம் பார்சிலோனாவில் நடந்த ஒரு சுகாதார மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட சர்வதேச நிபுணர்கள், இந்த நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். இது சிரோசிஸ் (கல்லீரல் சுருங்குதல்) மற்றும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்க உதவும் முக்கிய வழியாகும். இதையடுத்து, MASLD நோயால் உலகளவில் சுமார் 33% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிகத் தீவிரமான நிலையான MASH, சுமார் 5% பேரைத் தாக்குகிறது. டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். MASH நோயின் ஆபத்தான அம்சம் என்னவென்றால், இது நீண்ட காலம் எந்த அறிகுறிகளும் இல்லாமல் கல்லீரலைப் பாதித்து, திடீரென ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.
இந்நிலையில், சுகாதார அமைப்புகள் 2027ஆம் ஆண்டுக்குள் MASH நோயைக் கண்டறியும் விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், இந்த நோய் லட்சக்கணக்கானவர்களை அறிகுறிகள் இன்றி பாதிக்கிறது, ஆனால் மிகக் குறைவானவர்களிடம் மட்டுமே நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. நோயாளிகளை அடையாளம் காண, மருத்துவர்கள் பாதிப்பில்லாத கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆபத்தில் உள்ளவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்ய வேண்டும். கல்லீரல் பரிசோதனைகளை சாதாரண சுகாதார பரிசோதனைகளுடன் இணைக்க வேண்டும். நோய்களைத் தடுக்கவும், சிறந்த சுகாதார வழிகாட்டுதல்களுக்காகவும் கொள்கைகளைப் புதுப்பிக்க வேண்டும். முதன்மை மருத்துவர்கள், நீரிழிவு நிபுணர்கள், இருதய நிபுணர்கள் மற்றும் நோயாளி அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இதை தொடர்ந்து, ஐஎஸ் குளோபல், இன் பொது சுகாதார கல்லீரல் குழுத் தலைவரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான ஜெஃப்ரி லாசரஸ் கூறுகையில், “MASH-க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது, நோய் தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், ஆரம்ப கட்டத்தில் ஃபைப்ரோசிஸ் இல்லாதவர்களை அடையாளம் காண்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது மில்லியன் கணக்கான மக்களின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,” என்றார்.
இதை தொடர்ந்து, ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, MASLD உடன் வாழும் மக்களின் எண்ணிக்கை 2021 இல் 8 மில்லியனாக இருந்தது. இது 2030க்குள் 12.7 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், MASH தொடர்பான இறப்புகளும் இருமடங்காக அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. சுகாதாரச் செலவுகள் 2040க்குள் 3.5 பில்லியன் டாலரை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், MASLD மற்றும் MASH போன்ற கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உலக சுகாதாரத்திற்கு ஒரு அமைதியான அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன. இந்த நோய்கள் பற்றி விழிப்புணர்வு, ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைகள் மற்றும் தனிப்பட்ட நபரை மையப்படுத்திய சிகிச்சை ஆகியவை இப்போது மிக அவசியமானவை. உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.