தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (VAO) உதவியாக இருக்கும் இந்த கிராம உதவியாளர் பணி மிக முக்கியமானது. இந்தப் பணிக்கான நியமன முறைகள், மதிப்பெண் வழங்கும் முறைகள், மற்றும் நேர்காணல் (இன்டர்வியூ) நடத்தும் விதிகள் போன்றவற்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்தப் பகுதிக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும், பைக் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருந்தால், அதற்கான தேர்வு நடத்தப்பட மாட்டாது. சைக்கிள் அல்லது பைக் ஓட்டும் திறன் உள்ளவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றால் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதே தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். இன்டர்வியூ என்பது வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மற்றும் பிற தனி வட்டாட்சியர்கள் கொண்ட குழுவினரால் நடத்தப்படும்.

இதையடுத்து, தமிழ் வாசிக்கும் மற்றும் எழுதும் திறனைப் பொறுத்து 30 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். நேர்காணல் குழுவின் முன் விண்ணப்பதாரர் வாசித்தும், எழுதியும் காட்ட வேண்டும்.விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் திறனைப் பொறுத்து, குறைந்தபட்சம் 6 மதிப்பெண்கள் முதல் அதிகபட்சம் 12 மதிப்பெண்கள் வரை நேர்காணலுக்கு வழங்கப்படும். எந்தக் காரணத்திற்காகவும் 6-க்கும் குறைவாகவோ அல்லது 12-க்கும் அதிகமாகவோ மதிப்பெண் வழங்கப்படாது.

இதைதொடர்ந்து, கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் உரிய விதிகளைப் பின்பற்றி வெளியிடப்பட வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையிட வேண்டும். தேர்வு முறை சரியான விதிகளைப் பின்பற்றி நடைபெற்றுள்ளதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த விதிகளில் ஏதேனும் மீறல் நடந்தால், சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Read more இனி சுய அறிவிப்பு மட்டும் போதும்!. நகை கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆர்பிஐ!. என்னென்ன விதிகள் தெரியுமா?. முழுவிவரம் இதோ!