இன்றைய காலத்தில் அனைத்திலும் டிஜிட்டல் புகுந்து விட்டதால் அலைந்து திரிந்து, பல மணிநேரம் கால் கடுக்க வரிசையில் நின்று பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்த விஷயங்களை தற்போது மக்கள் சில நொடிகளில் செய்து முடித்து விடுகிறார்கள். வங்கியில் சேமிப்பு கணக்கை (savings account) துவங்குவது பெரிய வேலையாக இருந்த நிலையில், தற்போது தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் எளிதாக ஓபன் செய்து கொள்கிறார்கள். ஆன்லைனில் சேவிங்ஸ் அக்கவுண்ட்டிற்காக விண்ணப்பிக்கும் ஒரு தனிநபர் வீடியோ KYC-ஐ முடித்து சில நிமிடங்களில் அக்கவுண்ட்டை ஓபன் செய்து விட முடிகிறது. இந்த நடைமுறை காரணமாக மக்கள் பல வங்கிகளில் தங்களுக்கென்று பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை ஓபன் செய்து கொள்கின்றனர்.
இதனால், ஒருவருக்கு ஒரு பேங்கில் அக்கவுண்ட் இருப்பது பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, ஒருவரே பல பேங்க்குகளில் அக்கவுண்ட்ஸ் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளும் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்ய பல லாபகர திட்டங்களை வழங்குகின்றன. இதுதவிர வங்கிகளால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகள் மாறுபடலாம். இதுபோன்ற சில காரணங்கள் கூட மக்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க தூண்டுகின்றன. பல பேங்க் அக்கவுண்ட்ஸ்கள் இருப்பது நல்லது என தோன்றினாலும், சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருப்பது நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது.
ஒரு அக்கவுண்ட் மட்டுமே வைத்திருப்பதால் சில சிக்கல்கள் உண்டு. சில நேரங்களில் உங்கள் கணக்குள்ள வங்கியின் சர்வர் செயலிழந்து போனாலோ, பராமரிப்பு நேரங்களிலோ பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படும். சாதாரண நேரங்களில் பரவாயில்லை. அது ஒரு அவசர கால சூழலாக இருந்தால் நிச்சயம் தடுமாற்றத்தையும் சிக்கலையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.
அந்த நேரத்தில் யாரிடமும் கடனாக பணம் கேட்க முடியாது. அவர் UPI மூலம் பணம் அனுப்பினாலும் உங்களுக்கு வராது. சில நேரங்களில் பணம் அவரது கணக்கில் இருந்து வெளியாகி உங்கள் கணக்கில் வராமல் நடுவிலே நிற்கும். மீண்டும் அவரது கணக்கிற்கு பணம் திரும்பி விடும். ஆனாலும் அதற்கு எடுக்கும் நேரம் தாமதம் ஆனால், அது மன உளைச்சலை தரும். நேரில் பார்த்து ரொக்கமாக வாங்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
சர்வர் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் உண்டு. அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் அளவுக்கு அதிகமாக நடைபெறும் போது அவர்களின் சர்வர்களில் அதிக டிராபிக் காரணமாக ஜாம் ஆகிவிடும். அதனால் வெப்சைட்கள் அப்படியே உறைந்து விடுகின்றன. இதனால் பணப் பரிவர்த்தனைகள் தேங்கி விடுகின்றன. பெரும்பாலும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சில அரசு வங்கிகளிலும் சில தனியார் வங்கிகளிலும் இவ்வாறு நடைபெறுகிறது. இதில் அரசு, தனியார் என்ற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை. அந்த நேரத்தில் நீங்கள் வங்கியில் பணத்தினை டெபாசிட் செய்யவோ எடுக்க முடியாது.
அரசு வங்கிகளில் அதிக வசதிக் கொண்ட ஒரு வங்கியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சர்வர் பிரச்சனை வராத வங்கியாக அது இருக்க வேண்டும். பல அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் வசதிகளை வழங்குகின்றன. அரசு ஊழியர்கள் சம்பளக் கணக்குகள் அதிகம் உள்ள வங்கிகளில் சேவைகள் நன்றாக இருக்கும். உங்களின் ஒரு வங்கிக் கணக்கு எப்போதும் அரசு வங்கியில் இருக்க வேண்டும். இதில் எப்போதும் அதிக பணத்தினை சேமித்து வையுங்கள்.
மினிமம் பேலன்ஸ்: நீங்கள் எத்தனை பேங்க் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருந்தாலும் அவை ஒவ்வொன்றிலும் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்க வேண்டும். வங்கிகளே இந்த மினிமம் பேலன்ஸ் லிமிட்டை தீர்மானிக்கின்றன. சர்வீஸ் மற்றும் உங்களது அக்கவுண்ட்டை மெயின்டையின் செய்யும் செலவை கருத்தில் கொண்டு, நீங்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத போது குறிப்பிட்ட அளவு அபராத கட்டணங்களை வங்கிகள் விதிக்கும்.
பணம் எடுப்பதற்கான லிமிட்: சில சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களுடன் இணைக்கப்பட்ட டெபிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தும் போது ஒரு நாளில் இவ்வளவு பணம் தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும். இந்த சூழலில் நிச்சயமாக உங்களிடம் பல பேங்க் அக்கவுண்ட்ஸ் இருப்பது உதவியாக இருக்கும். நிறைய பணம் தேவைப்படுகிறது என்றால் உங்களிடம் இருக்கும் வெவ்வேறு அக்கவுண்ட்ஸ்களில் இருந்து பெரிய தொகையை எடுக்கலாம்.
நீங்கள் ஒரே நேரத்தில் பல பேங்க் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருக்கலாம் என்றாலும், சில அக்கவுண்ட்டை நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலற்ற அக்கவுண்டாக (Dormant account) குறிப்பிடப்படும். கணக்கை செயலற்ற நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது பல கட்டணங்களை ஈர்க்கலாம். கடைசியில் இது உங்கள் அக்கவுண்டின் பேலன்ஸ் தேவையின்றி குறைய வழிவகுக்கும்.
வங்கி கட்டணங்கள்: வங்கிகள் பல சேவைகளை இலவசமாக வழங்கினாலும் ஒரு சில சேவைகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பெரும்பாலும், வாடிக்கையாளர்கள் பல கட்டணங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். எனவே, ஒரு வாடிக்கையாளராக நீங்கள் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கிகளின் வெவ்வேறு கட்டணங்களை பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் 2 அல்லது அதிகபட்சம் 3 வங்கி கணக்குகள் வரை பராமரிப்பது விவேகமானது. அப்போது தான் அவற்றை எளிதாக உங்களால் பராமரிக்க மற்றும் கண்காணிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்,