ஐபிஎல் 18ஆவது சீசனில் ராஜத் படிதர்தான் ஆர்சிபிக்கு கேப்டனாக இருப்பார் என அந்த அணி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டில், விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதன்பிறகு சென்னை அணியில் இருந்த பாப் டூ பிளஸியை பெங்களூரு அணி வாங்கியது. கோலிக்கு பிறகு இவரது தலைமையில் ஆர்சிபி விளையாடிவந்தது. அணியில் கேப்டன்கள் மாறினால், சொதப்பல்கள் மாறவில்லை. பாப் டூ பிளஸி, தலைமையில், 21 வெற்றிகளையும், 42 தோல்விகளை ஆர்சிபி அணி சந்தித்தது. இதனால்தான், 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்குமுன், டூ பிளஸியை ஆர்சிபி வெளியேற்றியது.
இந்நிலையில், 18ஆவது சீசனுக்கான ஏலத்தில், டூ பிளஸியை டெல்லி கேபிடல்ஸ் அணி 7 கோடி மதிப்பில் வாங்கியது. ஆனால், ஆர்சிபி அணியானது, கேப்டன்ஸி வீரரை வாங்காமல், ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அதிக தொகை இருந்தும் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்றவர்களில் யாரையுமே வாங்கவில்லை. குறிப்பாக, கடைசிவரை கூட போராடவில்லை. இதனால், 18ஆவது சீசனுக்கு கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஐபிஎல் 18ஆவது சீசனில் ராஜத் படிதர்தான் ஆர்சிபிக்கு கேப்டனாக இருப்பார் என அந்த அணி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், மத்தியபிரதேச அணியை சிறப்பாக வழிநடத்தி, இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். பைனலில், மும்பை அணியிடம் மத்தியபிரதேச அணி தோற்றது. இருப்பினும், பைனலில் ராஜத் படிதர் 40 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், அத்தொடரில் அதிக ரன்களை குவித்த மூன்றாவது வீரராகவும் ராஜத் படிதர் இருந்தார். 10 போட்டிகளில் 61.14 சராசரி, 186.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 428 ரன்களை அடித்தார். ஆர்சிபிக்காக 27 போட்டிகளில் 799 ரன்களை எடுத்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் 2022 தொடரில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில், 112 ரன்களை குவித்து, அணியின் முக்கிய வீரராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.