கணவனுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த மனைவியின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் சௌரப் ராஜ்புத் என்பவரை அவரது மனைவி முஸ்கான் மற்றும் கள்ளக்காதலன் சாகல் ஆகியோர் கொடூரமாக கொலை செய்து உடலை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற டிரம்புக்குள் போட்டு, சிமெண்ட் போட்டு பூசியிருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் முஸ்கான் மற்றும் காதலன் சாகல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தான், உத்தரப்பிரதேச மாநிலம் ஹோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாயா மவுரியா என்ற பெண், தனது கணவரை சௌரப் ராஜ்புத் பாணியில் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி நீல நிற டிரம்புக்குள் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தர்மேந்திர குஷ்வாகா என்பவர் கடந்த 2016இல் மாயா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தர்மேந்திர தனது மனைவி மாயா பெயரில் நிலம், கார்களை வாங்கியுள்ளார். பின்னர், வீடு கட்டுவதற்காக அதற்கான கட்டிட ஒப்பந்தத்தை தன்னுடைய உறவினரான நீரஜ் மவுரியா என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது, நீரஜூக்கும் மாயாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா காலகட்டத்தின் போது நீரஜின் மனைவி உயிரிழந்ததால் மாயா மற்றும் நீரஜ் உறவு மேலும் வலுவானது.

இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், கடந்த 2024இல் மாயாவின் கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதாவது, மாயா நீரஜூடன் சென்ற நிலையில் தன்னை தாக்கியதோடு வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் போன்றவற்றை கட்டாயமாக எடுத்துச் சென்றதாக புகாரில் கூறியிருக்கிறார். இந்நிலையில் தான், நடு ரோட்டில் வைத்து மாயா தற்போது தனது கணவரை மிரட்டி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.