தண்ணீர் பேரலில் இருந்து 5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தாயே குழந்தையை கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையை கொன்று அந்தப் பெண் நாடகம் ஆடியது ஏன் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புலியூர் கிராமத்தில் 5 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது. குழந்தையின் கையில் இருந்த காப்பு, கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ஆகியவை காணாமல் போயிருந்த நிலையில், மர்ம நபர்கள் வந்து குழந்தையின் நகைகளுக்காக கொன்றுவிட்டதாக தாய் லாவண்யா தெரிவித்துள்ளார். பின்னர், குழந்தையின் உடலை காணவில்லை என்று லாவண்யாவும், மற்றவர்களும் சேர்ந்து தேடியுள்ளனர்.
இதையடுத்து, லாவண்யாவே தண்ணீர் பேரலில் இருந்து உடலை கண்டுபிடித்ததோடு அதிர்ச்சி அடைந்து கதறியுள்ளார். வீட்டில் காவலுக்கு 3 நாய்கள் இருக்கின்றன. வீட்டிலும் ஆட்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், யார் வந்து குழந்தையை கொன்றிருப்பார்கள் என்று சந்தேகம் அடைந்த காவல்துறையினர், தாய் லாவண்யாவை முதலில் விசாரித்துள்ளனர். முதலில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்த நிலையில், லாவண்யாவின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் விசாரணையை தொடர்ந்துள்ளனர். பின்னர், லாவண்யாவின் தாயை விசாரிக்க முயன்ற போதுதான் லாவண்யா உண்மையை கூறியுள்ளார்.
அதாவது, லாவண்யாவுக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் உள்ளது. திருமணமாகி 10 நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த லாவண்யா, மற்ற நாட்களில் அவர் தாயார் வீட்டில் தான் இருந்து வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில், அதை காரணம் காட்டி கணவனுடன் சேர்ந்து வாழ கணவனின் வீட்டார் தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.
நாக்பூரில் இருக்கும் கணவர் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும்பொழுது தன்னை அவருடன் சேர்ந்து வாழ அழைப்பார் அல்லது குழந்தையை தூக்கிச் சென்று விடுவார் என்று நினைத்த லாவண்யா, குழந்தை இருந்தால் தானே தன்னை கணவரோடு வாழ வைப்பார்கள் என்று எண்ணி குழந்தையை தண்ணீர் பேரலில் முக்கி கொலை செய்துள்ளார். கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் மன விரக்தியில் பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைக்காக நடந்த கொலை போல நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.