நெல்லையில் நடந்த கோவில் திருவிழாவில், வேட்டைக்குச் சென்ற சாமியாடிகள் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளுடன் வந்து சாமியாடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும். இந்தத் திருவிழாக்களில் சாமியாடிகள் நள்ளிரவில் “வேட்டைக்குச் செல்லும்” நிகழ்ச்சி வழக்கம். கையில் தீப்பந்தம் ஏந்தி குறிப்பிட்ட தூரம் சென்று மீண்டும் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் வீரவநல்லூர் உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோவிலில் இந்த முறை அப்படி நடக்கவில்லை. சாம பூஜை முடிந்ததும் மூன்று சாமியாடிகள் வேட்டைக்குச் சென்றனர். அவர்கள் திரும்பி வந்தபோது, ஒரு சாமியாடியின் கையில் மண்டை ஓடு இருந்தது. இன்னொருவர் கையில் சதையுடன் கூடிய எலும்பும், மற்றொருவர் கையில் எரிந்த தலையும் இருந்தன. அதைக் கண்ட பக்தர்கள் அதிர்ந்து போயினர். சாமியாடிகள் அந்த உடல் பாகங்களை வாயில் வைத்து கடித்தபடியே ஆடினர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதைதொடர்ந்து, புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட மனிதர்களின் உடல் பாகங்களை இப்படி எடுத்து வந்து சாமியாடுவது சட்டப்படி தவறு. எனவே, இந்தச் செயலில் ஈடுபட்ட சாமியாடிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு சம்பவம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி என்ற கிராமத்தில் உள்ள சக்திபோத்தி மாடசாமி கோவில் கொடைவிழாவில் நடந்தது. அங்கும் சாமியாடிகள் மண்டை ஓட்டைத் தூக்கி வந்து சாமியாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாமியாடிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மீது பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : சொத்துகளை எழுதிக் கொடுத்த பிறகு பிள்ளைகள் கொடுமைப்படுத்துகிறார்களா..? பெற்றோர்களே கண்டிப்பா இதை படிங்க..!!